தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி. சடலத்தை தூக்கிச் சென்று மனிதாபிமான உதவி புரிந்த பொலிஸார்.

0
194

மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைக் கல் மலை பிரதேசத்தில் சம்பவம்.கரடியங்குளம், குசலானைப் பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட காட்டு வழிப்பாதையூடாக சென்று, வெள்ளைக் கல் மலையில் தங்கியிருந்து தேன் எடுப்பதற்காக கடந்த 10 நாட்களாக தங்கியிருந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சித்திரவேல் சிறி கந்தராசா (58)என்பவரே நீரில் மூழ்கி மரணமடைந்வராவார்.

தனது அன்றாட ஜீவனோபாயத்திற்காக இவரும் இவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த மலையில் தங்கியிருந்து, அங்கிருந்து பல மைல் தூரம் காடுகளுக்குள் நடந்து சென்றே தேன் எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

நேற்றைய முன்தினம்(14/09) காலை 07.00 மணியளவில் 2000/= ரூபா பணத்துடன் சமைப்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்ய சென்ற இவர் அன்றிரவுவரை குறித்த மலைக்கு திரும்பாததால் , தந்தை வரும் வரை மறுநாள் (15/09)காலை அருகாமையிலுள்ள குளத்தில் மீன் பிடித்து சாப்பிடுவோம் எனக்கருதி, அவரது மகன் விஜயகாந் (26) என்பவர் சென்றபோது “தனது தந்தையின் பாதணிகள் இரண்டும் குளத்தில் மிதப்பதை அவதானித்து தேடுதலில் ஈடுபட்ட போது “தனது தந்தை ஆழமான குளப்பகுதிக்குள் நீரில் மூழ்கி மரணித்திருப்பதை கண்டுள்ளார்.

சன நடமாட்டமேயில்லாத இப்பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒருவர் நடமாடுவதை கண்டதும், அவரிடம் ஓடிச்சென்று விடயத்தை தெரிவிக்க, அவரே கரடியனாறு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர் அவர்களுக்கு விடயத்தை தெரிவித்த பொலிசார் , மரண விசாரணை அதிகாரியுடன் ஏறாவூரிலிருந்து சுமார் 60 Km தூரத்தை இரண்டு மணித்தியாளங்கள் பயணித்து சம்பவ இடத்தை சென்றடைந்தனர்.

வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாத காட்டு வழிப்பாதையில் பொலிஸ் சாரதியின் சாமர்த்தியத்தால் மிகவும் சிரமப்பட்டு கடைசி 20 km ஐ கடந்தனர். ஆனாலும் 02 Km தூரம் காட்டுவழியாக நடந்தே அனைவரும் சென்றனர்.

வெள்ளைக் கல் மலை குளத்தில் மூழ்கி தலை மாத்திரம் வெளியில் தெரிந்த சடலத்தை , மிகவும் சிரமத்தோடுதான் பொலிசாரும் அவரது பிள்ளைகளும் கரைக்கு கொண்டு வந்தனர்.

தேன் எடுப்பதற்காக சென்றவர்களில் ஆறு பேரும் (இரண்டு சிறு குழந்தைகள்) ,பொலிசார் இருவரும் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஊடகவியலாளர் ஒருவருமே சம்பவ இடத்தில் நின்றனர்.

பயங்கரமான காட்டுச் சூழல்.
சற்றுமுன்னர்தான் அவ்வழியால் யானைகள் சென்றதற்கான சான்றுகள் இருந்தும் சடலத்தை பொலிசாரின் வண்டியில்தான் ஏற்ற வேண்டிய நிலையில், இரண்டு பொலிசாருடன் அவரது இரண்டு ஆண் மக்களும் இணைந்தே 02 Km தூரத்திற்கு காட்டு வழியாக தூக்கிச்சென்றே வண்டியில் ஏற்றினர்.
இந்த விடயத்தில் பொலிசார் நடந்து கொண்ட விதம் மெச்சத்தக்கது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டு, சடலம் நேற்று மாலை (15/09) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேறு நிறைந்த ஆழமான குளப்பகுதியினுல் கால்கள்
புதையுண்டதால் அதிலிருந்து மீள முடியாமலே நீரில் மூழ்கி மரணித்திருப்பதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here