ஹட்டன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (30) காலை உணவருந்தச் சென்ற நபர் ஒருவருக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஏற்பட்டுள்ளது.
காலை உணவாக தோசையை உட்கொண்டுக் கொண்டிருந்தபோது, பரிமாறப்பட்ட தோசைத் தட்டில் உணவோடு கலந்து கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததை அவர் அவதானித்துள்ளார். இதனால் அவர் உடனடியாக உணவை நிறுத்தியதுடன், சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்பு தெரிவித்த உணவக உரிமையாளர், குறித்த உணவுக்கான கட்டணத்தை வசூலிக்காமல் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தச் சம்பவம் ஹட்டன் நகரிலுள்ள சில உணவகங்களில் பேணப்படும் உணவு சுகாதாரம் மற்றும் தூய்மைத் தரம் தொடர்பில் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்களின் உடல்நலனுடன் நேரடியாக தொடர்புடைய உணவகங்களில் சுகாதார விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசரமாக ஆய்வு செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சுகாதார நடைமுறைகளை மீறும் உணவகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உடனடி சோதனைகளை மேற்கொண்டு, சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



