நடிகர் பிரகாஷ்ராஜ் இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு புகழ் பெற்ற நடிகராக திகழ்கிறார்.
இவர் தனது தாயார் சுவர்ணலதாவுடன் (வயது 86) பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், வயோதிக நோய்களால் அவதிப்பட்டு வந்த பிரகாஷ்ராஜின் தாயார் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. எவரையும் அசைத்துப் பார்க்கக் கூடியது. இந்தத் துயர்மிகு வேளையில் சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவரது கரம்பற்றிக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




