அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரிக் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
புதிய முறையின் கீழ், இலங்கைக் நிலக்கரி நிறுவனமே (Lanka Coal Company) சம்பந்தப்பட்ட பரிசோதனை அறிக்கைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இடைத்தரகர்கள் மூலமாக ஏற்படக்கூடிய நிதி மற்றும் தரம் தொடர்பான மோசடிகள் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் மாதம் முழுவதும் தீவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக, ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் புனல்மின் உற்பத்தியைத் தவிர்த்து, மின் உற்பத்திக்குத் தேவையான போதுமான நீர் கொள்ளளவு தற்போது நாட்டில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக விளக்கமளித்தார்.
தற்போது நாட்டின் மின்சாரத் தேவையில் 48% புனல்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய, மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு மின்வெட்டு எங்குமே ஏற்படாது என அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.




