அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ராவில் நீர் தேங்கியிருந்த பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை நேற்று (20)நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர்.
விடயம் தொடர்பில் பொது மக்கள் அக்கரப்பத்தனை பொலிஸார் மூலம் நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் சிறுத்தையை உயிருடன் மீட்டனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் சிறுத்தையின் உடல் நிலை குறித்து ஆராய்ந்ததுடன் அதன் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இதனை சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக அக்கரப்பத்தனை தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.




