நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது .
மழையுடன் கடும் குளிர் நிலவுவதுடன் அடிக்கடி சில பிரதேசங்களில் பனி மூட்டமும் காணப்படுகின்றன.
ஹட்டன் கொழுமபு; பிரதான வீதியில் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல., தியகல வட்டவளை ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும், நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி பனி மூட்டம் காணப்படுகின்றன.எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களின் மூகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக நீரேந்து பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.
இதனால் கெனியோர் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளன.எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே வேளை காசல்ரி, லக்ஸபான நவலக்;ஸபான, மவுசாகலை, மேல்கொத்மலை பொல்பிட்டிய விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகு வேகமாக உயர்ந்து வருவதாகவும் இந்த நீரினை பயன்படுத்தி உச்ச அளவு மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாகவும் மினசார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சில பிரதேசங்களில் மண் சரிவு அபாயமும் அதிகரித்துள்ளன இதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மலைவாஞ்ஞன