நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென பலமுறை சமூக வலைதளங்களுக்கு அரசு அறிவித்திருந்தும் இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் நேற்று (4) 26 சமூக வலைதளங்களுக்கான தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டொக் மற்றும் வைபர் உள்ளிட்ட 5 சமூக வலைத்தளங்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து நேபாளத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு, நேபாளத்தின் உயர் நீதிமன்றம் அனைத்து சமூக ஊடக தளங்களும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அதிகாரியிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.