இலங்கையில் தற்போது காணப்படும் பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் செஹான் திசாநாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“தற்போது, பாடசாலை மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பரீட்சைகளை நடத்த வேண்டும். இந்த வருடத்துக்கான பாடத்திட்டம் அடுத்த வருடம் வரை கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக பாடாசாலைப் பரீட்சைகள் தாமதமாக நடத்தப்படுகின்றது.
முதல் முறையாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இரண்டாவது முறையாகவும் பரீட்சைக்கு தோற்றுவார்களாயின் அவர்களுக்கு சிறிய இடைவேளை ஒன்று வழங்கப்பட வேண்டும்.
பரீட்சைத் திணைக்களம் உரிய முறையில் பரீட்சைகளை திட்டமிட்டு நடத்த வேண்டும். இந்தநிலையில், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.”என இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.