பத்தனை டெவோன் காட்டு மாரியம்மன் ஆலயத்துக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்ய 08.09.2022 அன்று வியாழக்கிழமை நுவரெலியா பிரதேச செயலாளர் சம்பத் தலைமையில் கிராம அதிகாரி மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் பத்தனை ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பத்தனை கொலனி பிரதேசம், டெவன், பெய்த்லி, கிரேக்லி ஆகிய தோட்ட மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலய நிர்வாக சபை ஒன்றை அமைப்பதாக இருந்தால் 14 பேர் கொண்ட குழு தேவையென்றும் அந்த எண்ணிக்கையானோரின் ஆதரவு இருந்தால் மாத்திரமே நிர்வாக சபை ஒன்றை தெரிவு செய்ய முடியும் என்றும் பிரதேச செயலாளர் கூறினார்.
எனினும் கூட்டத்துக்கு வருகை தந்தவர்களில் மூவர் மாத்திரமே புதிய நிர்வாக சபையை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த அதே வேளை, டெவன் தோட்ட மக்கள் ஆரம்ப காலத்திலிருந்து இங்கு ஒரு நிர்வாகம் இருப்பதாகவும் புதிதாக ஒன்று தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து கூட்டம் நிர்வாக சபையைத் தெரிவு செய்யாமலேயே முடிவுக்கு வந்தது. இதற்கு முன்பதாக ஏற்கனவே மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கூட்டம் 25/07/2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டாலும் டெவன் தோட்ட மக்களின் எதிர்ப்பு காரணமாக அக்கூட்டமும் தோல்வியிலேயே முடிவடைந்தமை முக்கிய விடயம்.
(க.கிஷாந்தன்)