முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மாறாக மக்களுக்காக அறிஞர் அண்ணா உண்மையாக உழைத்தார் எனவும் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா, மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர், இருமொழிக் கொள்கையை தமிழகத்திற்குத் தந்தவர், தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்.
சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர், குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர், கொள்கை வழி நின்றவர், கனிவின் திருவுருவம்.
இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர்.
தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.” என விஜய் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.