மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சர்வு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இன்று காலை முதல் நோட்டன் பகுதிக்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக நோட்டன் தியகல பிரதான வீதியில் தியகல பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் வீழ்ந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
காலை முதல் தொடச்சியாக மழை பெய்து வருவதானால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.தொடர் மழை காரணமாக நடை பாதை வரத்தகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக நடை பாதை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல ,பிட்டவல,நானுஓயா,கினிகத்தேனை,கடவல வட்டவளை தியகல,ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா கொட்டகலை,தலவாக்கலை,சென்கிளையார்,நானுஓயா,ரதல்ல ஆகிய பகுதிகளில் மழையுடன் அடிக்கடி பனி மூட்டம் நிகழ்வதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் மண் மேடுகளுக்கு மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மலைவாஞ்ஞன்




