எதிர்வரும் எட்டாம் திகதி மத்திய மாகாணத்தின் காலப்பகுதி முடிகிறது. இந்த இறுதி காலப்பகுதியில் மத்திய மாகாண பதில் முதலமைச்சர் பதவியினை ஒரு தமிழருக்கு கொடுத்ததற்கும், அதுவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளருக்கு கொடுத்ததையிட்டு பெருமையடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கான நிதி உதவியும், விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் 30.09.2018 அன்று அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் ரூபா மாகாண சபையினால் ஒதுக்கப்பட்டு இருந்தது, இதனை மக்கள் முறையாக பயன்படுத்தப்படாததன் காரணமாக இந்தமுறை 60 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அரசாங்கம் திட்டங்களை நடைமுறைபடுத்தும் போது அதனை மக்கள் வரவேற்காவிட்டால் அது இல்லாது போய்விடும் எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை முறையாக மக்கள் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
அதேசமயம் அரசாங்க திட்டங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. ஐம்பது வீதம் அரசாங்கமும் மீதியினை பயனாளிகளும் செலுத்த வேண்டும். அப்போது தான் அதன் பெறுமதி தெரியும் எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்தால் அதன் பெறுமதி தெரியாது.
இந்த மத்திய மாகாணத்தில் பொருட்கள் வழங்கும் இறுதி நிகழ்வு இதுவாக இருக்கலாம். அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எமது மக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
அத்தோடு பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்களின் அமைச்சின் கீழும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)