மனைவியின் அடிதாங்க முடியாததால் இதிலிருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
உத்தரப் பிரதேசம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தினம் தினம் சண்டை இடம்பெற்று வந்துள்ளது. மனைவிக்கு கோபம் தலைக்கேறும் போதெல்லாம் கணவனை கடுமையாக தாக்கி உள்ளார்.
குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்க முடியவில்லை. இதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த அவர் மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு போன்ற அமைப்பை கட்டி வாழ்ந்து வருகிறார்.
பனை மர வீட்டில் அவர் இருக்கும் சமயத்தில் அவரது குடும்பத்தினர் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்புகிறாகள். சுமார் ஒரு மாதமாக இவ்வாறு அவர் பனைமரத்தில் வாழ்ந்து வருகிறார்.
இவரை மரத்தில் இருந்து கீழே இறங்கும்படி கிராம மக்கள் மற்றும் மனைவி வற்புறுத்திய போதிலும் அவர் இதுவரை இறங்கவில்லை. இறங்கும்படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்து வருகின்றார்.
இதையடுத்து உறவினர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வீடியோ பதிவினை மேற்கொண்ட பின்னர் இப்பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றுள்ளனர்.