மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருக்கின்றது – உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

0
214

மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஊடாக தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இன்று (03.10.2022) கொழும்பில் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்த காளியம்மா இன்று உயிரிழந்ததைப் போன்று, நாளை மண்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் காணி அமைச்சர் ஹரீனுடனும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்கொண்டு பேசியதாகத் தெரிவித்த அவர் இதற்கு உடனடியாக தீர்வை எடுக்க வேண்டும் என்றும் ஏனெனில் நாட்கள் செல்ல செல்ல இதன் ஆபத்து அதிகம் என்றார்.

பாடசாலையில் நடைபெறும் விழாக்களுக்கு மாணவர்களிடம் பணம் அறவிடுதல் முறையாகாது. மாணவர்கள் அடித்து துன்புறுத்துவதை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு விடயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

போகாவத்தை பாடசாலை அதிபர் குறித்த பாடசாலையில் கல்வி கற்றும் மாணவியொருவரை அடித்த சம்பவத்தை அடுத்து பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், போகாவத்தை பாடசாலை அதிபர் ஆசிரியர் தின விழாவுக்காக 300 ரூபாவை செலுத்தாத காரணத்தினால் மாணவியொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்திவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்காக பணம் அறவிடுதல் முறையாகாது. இதனைக் காரணம் காட்டி மாணவர்களை அடிப்பதோ, திட்டுவதோ நியாயமானதல்ல. இவ்வாறான விடயங்கள் உங்களது பாடசாலைகளில் இடம்பெறுமானால், அது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ முறைப்பாடு செய்யுங்கள். இது சமூகப் பிரச்சினையாகும், இதனை அரசியல்வாதிகள் தலையிட்டு தீர்க்கும் பிரச்சினை அல்ல.

ஒரு சில அதிபர், ஆசிரியர்களின் தவறான செயற்பாடுகள் ஒட்டு மொத்த அதிபர், ஆசிரியர்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது. ” என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here