சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீன வர்த்தக துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவின் செமி கண்டக்டர், சிப் உட்பட சுமார் 3,000 வகையான பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை சுமார் 900 பொருட்களுக்கு மட்டுமே தடை விதித்து இருக்கிறோம். அமெரிக்காவின் நடவடிக்கைகளால் சீன நிறுவனங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
தற்போது வரி விதிப்பு மூலம் அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். வர்த்தக போரை சீனா விரும்பவில்லை. அமெரிக்க அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சீனாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இதேபோல வணிக கப்பல் போக்குவரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
HinduTamil