அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.இதில் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. மேலும் ஈரான் தொடர்புடைய 2 கப்பல்களையும் சிறைபிடித்தது. இதனால் 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ஆதிக்கத்தை ஈரான் அதிகப்படுத்தியுள்ளது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற 3 வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 2 கப்பல்களை சிறைபிடித்துள்ளது.ஈரானின் தாக்குதலில் சிக்கிய கப்பல்கள் லைபீரிய நாட்டு கொடி கொண்ட எபமினோண்டாஸ், பனாமா கொடியை கொண்ட எம்.எஸ்.சி பிரான்செஸ்கா, யூபோரியா (ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான கப்பல்) ஆகியவை என்பது தெரியவந்துள்ளது.இதில் எபமினோண்டாஸ் கப்பல், இந்தியாவின் குஜராத் முந்த்ரா துறைமுகத்தை நோக்கி வந்ததாகும். இந்த கப்பல்கள் அனுமதியின்றி இயங்கின என்றும், தொடர்ச்சியான விதிமீறல்களில் ஈடுபட்டன என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் இருந்து செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.




