ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் கடந்த வாரம் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் கூடியது.
ஈரான் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படியில்லாமல் அதிருப்தி ஏற்படும் வகையிலான வழியை தேர்ந்தெடுக்கும் என்றால், அவர்களை முற்றுகையிடுவதுடன், உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசி தாக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிப்பும் வெளியிட்டார். எனினும், 2-வது சுற்று பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




