நாட்டிற்கு சுமையை ஏற்படுத்தும் IMF இணக்கப்பாடு திருத்தப்படும் என கடந்த தேர்தல் காலத்தில் பிரஸ்தாபித்தோம். இப்பிரச்சினையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் போன்றே தேசிய மக்கள் சக்தியும் IMF இணக்கப்பாட்டை மாற்றுவோம் என்று கூறிய போதிலும், இன்று ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அவை அனைத்தையும் மறந்து ரணில் விக்ரமசிங்கவின் இணக்கப்பாட்டையும் தாண்டி, அநுர குமார திஸாநாயக்க தீவிர வலதுசாரி நவதாராளவாத வேலைத்திட்டத்தை நோக்கிச் சென்றுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பன்னல, தலம்மெஹெர பதிரண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
IMF கூறுவதையும் தாண்டிச் சென்று, அதன் நிபந்தனைகளைத் திருத்தி, IMF ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் அதிக வரிகளை இந்த அரசாங்கம் விதித்து வருகின்றது. IMF இணக்கப்பாட்டின் முதன்மைக் கணக்கு (Primary Account) 2.3% ஆக அமைந்து காணப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசாங்கம் அதனை 5.4% ஆகக் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, IMF இன் இலக்குகளைத் தாண்டியுள்ளதாகக் கூறும் அரசாங்கத்திற்கு, IMF இன் செல்லப் பிள்ளையாக மாறி மக்களை ஒடுக்கும் தேவையே இவர்களுக்கு காணப்படுகின்றன. ஆட்சியாளர்களுக்கு IMF கிண்ணத்தை வெல்ல வேண்டுமே தவிர வேறில்லை.
அரசாங்க வருமானம் IMF இலக்குகளின்படி 13.9% ஆக இருக்க வேண்டிய நிலையில் தற்போதைய அரசாங்கம் அதனை 15.4% ஆகப் பேணி வருகின்றது. மக்கள் மீது வரி விதித்தும், அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்களைக் குறைத்துமே இவை அனைத்தையும் செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 அரசாங்கம் எதிர்க்கட்சியின் வாயை மூடி, சுயாதீன மற்றும் நடுநிலையான நீதித்துறைக்கும் முறையற்ற செல்வாக்கைச் செலுத்து வருகின்றது.
அன்று பொய், ஏமாற்று மற்றும் மோசடிகள் மூலம் மக்களை ஏமாற்றிய அரசாங்கம், ஒருபுறம் பொய்களைக் கூறிக்கொண்டு, மறுபுறம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, கனம் நீதிமன்றத்தின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது. தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான நீதித்துறையை அரசாங்கத்தின் கைப்பாவையாக மாற்ற முயற்சித்து வருகின்றது. உயர் நீதிமன்றங்களின் கனம் நீதியரசர்களின் பதவிகளில் வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றை நிரப்பாமல் இருக்கவும், கனம் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கவும் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.
🟩 இன்றும் நெற்செய்கை விவசாயிக்கு 17 ரூபாய் நஷ்டம்.
வங்குரோத்துயடைந்துள்ள நமது நாட்டில், இதுவரை வருமான மற்றும் செலவினக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வறுமைக் கோடு சரியாக அடையாளம் காணப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் குழப்பிக்கொண்ட ‘L Borad’ அரசாங்கமாகவே திகழ்ந்து வருகின்றது.
எந்தவொரு விடயத்தைப் பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
இன்று விவசாயிகள் வீதிக்கு இறங்கி நெல்லுக்கு நிலையான விலையைக் கோரி வருகின்றனர். தேர்தல் காலத்தில் 150 ரூபாய் உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று 120 ரூபாயையே பெற்றுத் தருகின்றது. ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபாய் செலவாகிறது என விவசாய அமைச்சரே குறிப்பிடுகிறார். இதன் மூலம் இந்த அரசாங்கம் விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 கல்வி முறையை மாற்றுவோம் என்று கூறினாலும் அதைக் கூட சரியாகச் செய்ய முடியவில்லை.
கல்வி முறையை மாற்றுவதாகக் கூறி, வரலாற்றுப் பாடத்தை ஒரு முக்கிய பாடமாகத் தொடர்வதைக் கூட நிராகரித்துள்ளனர். 41 இலட்சம் இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு வரலாறு ஒரு முக்கிய பாடமாக அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும் அரசாங்கம் அதனை இல்லாமல் ஆக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் கூட 6-13 தரங்களுக்கு சிங்கள மொழியிலேயே கற்பிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேசக் கொள்கைகளைக் கூட அரசாங்கம் மறந்துள்ளது. இப்போதாவது இந்த கல்வி முறை மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 இன்று நாட்டில் முறையான முதலீடுகள் எதுவும் நடப்பதில்லை.
அன்று ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் போது அவற்றை விமர்சித்து, தீக்கிரையாக்க நடவடிக்கை எடுத்தவர்களே இன்று அதிகாரத்தில் வீற்றிருக்கின்றனர். தற்போது நாட்டில் காணப்படும் தொழிற்சாலைகள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.




