ஆன்மீகம் சார்ந்த விடயங்களில் அரசியல் செய்வதற்கு முற்படக்கூடாது. அரசியல் என்பது மக்களுக்கான சேவை. அந்த சேவையை முறையாக வழங்க அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைவாக நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட மத்திய பிரிவு, கெம்பியன் மேற்பிரிவு மற்றும் கெம்பியன் 57 ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆலயங்களுக்கான காசோலைகள், ஒலி பெருக்கி, மின்பிறபாக்கி மற்றும் கலசங்கள் என்பன வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது .
இதன்போது, அந்த ஊரில் உள்ள இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே நிதி ஒதுக்கீட்டை கையளிப்பதற்கு ரமேஷ்வரன் மேற்கொண்ட நடவடிக்கையை ஊர் மக்கள் பாராட்டினார்கள்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டுவருகின்றார். அதற்காக பல விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார். இதனை எமது பலவீனமாக கருத வேண்டாம், மக்களுக்காகவே அதனையும் செய்கின்றோம். ஏனெனில் எமது மலையக இளைஞர்களும் இன்று மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
ஆன்மீக நிலையங்கள், பாடசாலைகள் போன்ற முக்கிய – சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்ற இடங்களில் ஒருபோதும் அரசியல் நடத்தக்கூடாது. அவ்வாறான இடங்களில் இணைந்து செயற்பட்டு சிறந்த முன்னுதாரணத்தை சமூகத்துக்கு – அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கு அரசியல் தரப்புகள் முன்வர வேண்டும்.” – என்றார்.
(க.கிஷாந்தன்)