களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்து தற்கொலைக்கு முயன்ற தாய் குடும்ப நெருக்கடி காரணமாக இதனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – வத்தளை – கதிரான பாலத்திற்கு அருகில் தனது ஐந்து வயது குழந்தையை களனி ஆற்றில் எறிந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் ஊன்றுகோலுடன் கதிரான பாலத்திற்கு வந்து குழந்தையை முதலில் களனி ஆற்றில் எறிந்துவிட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவன் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், சிறுவனை தேடும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
42 வயதான தாயார் வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவர் சில காலமாக நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டாவது திருமணத்தில் கணவர் இறந்துவிட்டார் என்பதுடன், அவருக்கு முதல் திருமணத்தில் 15 வயது பிள்ளையும் உள்ளதாகத் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடும்ப நெருக்கடி காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.