இந்திய இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, பஞ்சாப் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான சீனியர் கிரிக்கெட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
233 ரன்கள்
தார்ன் தரன் அணிக்கு எதிராக அமிர்தசரஸ் அணிக்காக களமிறங்கிய அபிஷேக் சர்மா, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். எதிரணி பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்தார்.
அவரது மிரட்டலான பேட்டிங்கால் அமிர்தசரஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 533 ரன்கள் என்ற ஸ்கோரை குவித்தது.
வைரலாகும் ஸ்கோர்கார்டு
அபிஷேக் சர்மாவின் இந்த அசுரத்தனமான இன்னிங்ஸின் ஸ்கோர்கார்டும், போட்டியின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் பார்ம் அவுட்
உள்நாட்டு போட்டியில் அபாரமாக விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, சமீபகாலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
ஜிம்பாப்வே தொடரில் 3 இன்னிங்ஸ்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 131 ரன்கள் (சராசரி 26.2) மற்றும் அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளில் 49 ரன்கள் (சராசரி 24.5) மட்டுமே எடுத்தார். மேலும், கடைசி 10 டி20 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே பதிவு செய்துள்ளார்.
மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவாரா?
டி20 உலகக்கோப்பைக்கு முன்பு 37.05 ஆக இருந்த அபிஷேக் சர்மாவின் பேட்டிங் சராசரி, உலகக்கோப்பைக்குப் பிறகு 19.4 ஆக குறைந்துள்ளது. அதேபோல், அவரது ஸ்டிரைக் ரேட்டும் 195-இல் இருந்து 165 ஆக சரிந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் உள்நாட்டு போட்டி அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் தன்னம்பிக்கையை அளிப்பதுடன், சர்வதேச கிரிக்கெட்டிலும் பழைய அதிரடி பார்முக்கு திரும்புவதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



