ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் பதுளை மகளீர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக இன்றைய தினம் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
குறித்த பாடசாலை அதிபர் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான விசாரணைக்கு ஏதுவாக மாகாண முதலமைச்சர், தமது பொறுப்பில் இருந்த கல்வி அமைச்சின் பதவியில் இருந்து விலகி இருந்தார்.
இதனை அடுத்து அந்த பொறுப்பு ஆளுனர் வசம் வழங்கப்படுதவற்கும், முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக, கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறி இருந்தார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் சிறிலங்கா சுதந்திர கட்சி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டார்.