எரிபொருள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் எரிபொருள் உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பலோகம – திலக்கபுர பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கே இவ்வாறு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டினுள் இருந்துள்ளனர்.
எனினும், அயலவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிள்ளைகளில் ஒருவர், நாளை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், அவரின் பாடசாலை உபகரணங்கள் தீயில் எரிந்துள்ளதாகவும், வீட்டிற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.