பசிபிக் பெருங்கடலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்ற நிலைமை தற்போது ஆரம்பமாகி பலவீனமான மட்டத்தில் காணப்பட்ட போதிலும், வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது தீவிரமடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
உலகளாவிய வானிலை முன்னறிவிப்புகளின்படி, இந்த ‘எல் நினோ’ நிலைமை காரணமாக இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அத்திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டின் நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் ‘எல் நினோ’ நிலைமையானது மிகத் தீவிரமான மட்டத்தை எட்டுவதற்கு 63% சாத்தியக்கூறுகள் உள்ளன. எவ்வாறாயினும், இது மிகத் தீவிரமான நிலையை அடையாமல் இருப்பதற்கும் மூன்றில் ஒரு பங்கு (1/3) சாத்தியக்கூறு நிலவுவதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமை குறித்து மேலும் விளக்கிய பணிப்பாளர் மெரில் மெண்டிஸ், தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும் என்றும், அதேநேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழமையாகக் கிடைக்கும் மழைவீழ்ச்சியை விட அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் இனிமேல் கிடைக்கவுள்ள மழைவீழ்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, முறையான நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, வரவிருக்கும் விவசாய நடவடிக்கைகள், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற துறைகளுக்காக நீரை மிகவும் சிக்கனமாகவும் திட்டமிட்டப்படியும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்த காலநிலை நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.
‘எல் நினோ’ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்காக, வரவிருக்கும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னரே ஆரம்பிக்குமாறு அமைச்சர் விவசாயப் பெருமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




