எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (11) பிற்பகல் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் கட்சியின் எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாகச் செயற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரள இங்கு தெளிவுபடுத்தினார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, தனித்தனியாகச் செயற்படாமல், அனைத்து அரசியல் சக்திகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாகக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.




