ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சுகாதார அமைச்சு தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரம் பிறப்புகளில் 12.3 ஆக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சின் பேண்தகைமை சுட்டெண்ணின் படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் ஆயிரம் பிறப்புகளில் 07 ஆக பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31, 2021 நிலவரப்படி ஆயிரத்திற்கு 10.5 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, டிசம்பர் 31, 2022க்குள் 12.3 ஆக மோசமாக சென்றுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.மேலும், மகப்பேறு இறப்பு விகிதம் 100,000 பிறப்புகளுக்கு 29.5 ஆக அதிகரித்து வருவதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தை (ஒரு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள்) இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 6.8 ஆக அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.