சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய கடூழிய தண்டனை!

0
100

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்தி இருந்த நிலையில் , தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பில் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று இன்று புதன்கிழமை (20) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கானது இன்று பகல் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிறுமியின் வாக்குமூலம், சாட்சியங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை முதலியவற்றின் மூலம் மன்று சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்டு தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் , பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும், அதை கொடுக்க தவறும் பட்சத்தில் 24 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here