நடிகை ஜான்வி கபூர் தொடர்ந்தை வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ஜான்வி கபூரின் உருவத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாசமான ஏஐ டீப் பேக் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகரிக்கும் டீப்-பேக் பிரச்சினை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபல நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட பலரின் முகங்களை பயன்படுத்தி டீப்-பேக் (Deepfake) உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் ஆள்மை உரிமையும், நற்பெயரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
டீப்-ஃபேக் மற்றும் டிஜிட்டல் ஆள்மாறாட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பல பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் இணைந்துள்ளார். தனது பெயர், புகைப்படம், உருவ அமைப்பு மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
டீப் பேக் பக்கங்களை நீக்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ஜான்வி கபூரின் உருவத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாசமான ஏஐ டீப் பேக் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நடிகையின் பெயர் மற்றும் உருவத்தை பயன்படுத்தி தவறான முறையில் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களால் அவரது தனியுரிமை மற்றும் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை ஐகோர்ட்டு கவனத்தில் கொண்டுள்ளது.
ரசிகர் பக்கங்களுக்கு முழுமையான தடை இல்லை
அதே நேரத்தில், ஜான்வி கபூரை ஆதரிக்கும் ரசிகர் பக்கங்களை முழுமையாக முடக்க முடியாது என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் உருவாக்கும் பக்கங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் ஒரே மாதிரியாக தடை செய்ய முடியாது என கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் உலகில் பிரபலங்கள் விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




