தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை!

0
65

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.

மேலும், தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய வர்த்தக சபை கேட்போர் கூடத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கூறிய விடயங்களை தெரிவித்தார்.

நாட்டின் மாதாந்திர தேங்காய் தேவை 250 மில்லியன் என்றும், அதில் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கும், 100 மில்லியன் தேங்காய்கள் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டின் வருடாந்திர மொத்த தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் கொட்டைகளாக இருந்த போதிலும், கடந்த ஆண்டு அது 2,680 மில்லியன் கொட்டைகளாகக் குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி 2,400 முதல் 2,600 மில்லியன் கொட்டைகளாகக் குறையும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 200 மில்லியன் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக ஜயந்த சமரகோன் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here