நாட்டின் 75 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தோட்டங்களில் பசுமை பூமி வேலைத்திட்டம்; இன்று (07) திகதி லிந்துலை லிப்பகலை தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகத்தில் பிள்ளைகள் போசாக்கான உணவினை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்காக இந்த பசுமை பூமி வேலைத்திட்டத்தினை அறிவொளி பவுண்டேசன் ஆரம்பித்து வைத்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று லிப்பகலை தோட்ட அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதன் போது மா, கொய்யா, ஆனைக்கொய்யா, தோடம், நாரான், உள்ளிட்ட பெறுமதிமிக்க பழக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் வீட்டு தோட்டங்களில் நாட்டுவதற்கு பழக்கன்றுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களில் இவ்வாறான பழக்கன்றுகள் நாட்டி தோட்ட மக்களுக்கு சத்துணவு பெற்றுக்கொடுப்பதும் பொருளாதார ரீதியில் பயன் பெறுவதும் இதன் மற்றுமொரு நோக்கம் என இதன் ஏற்பாட்டாளரும் அறிவொளி பவுண்டேசனின் தலைவருமாக அம்மாசி நல்லுசாமி தெரிவித்தார்;.
குறித்த வேலைத்திட்டத்திற்கான அனுசரனையினை லண்டனில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தின் அரங்காவலர் சபையின் தலைவர் முருகபிள்ளை கோபாலகிருஸ்ணன் அவர்கள் கணகசுந்தரம் வரதீஸ்வரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இந்த வேலைத்திட்டத்திற்கு பிரதம அதிதியாக ஹட்டன் பெருந்தோட்ட கம்பனியின் லிப்பகலை தோட்ட முகாமையாளர் சுஜீவ கொடகே விவசாயத்திணைக்கள மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கே.கே. சந்திரலதா கிராம சேவகர், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய அறிவொளி பவுண்டேசன் தலைவர் அம்மாசி நல்லுசாமி கூறுகையில் இந்த நிகழ்வுக்கான அடிப்படை காரணம். எமது பிள்ளைகள் போசாக்கான உணவினை உண்ண வேண்டும். அவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் வெறுமனே நாம் விவசாயத்தில் ஈடுபட்டு அது ஒரு வியாபாரமாக செய்து கொண்டிருக்கின்றோமே தவிர எமது எதிர்கால சந்ததியினர் பலம்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தோட்டங்களில் பழச்சோலைகள் அமைப்பதற்கு நடவடிக்கையினை முன்னெடுத்து எமக்கு இலவசமாக கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். என்ற நோக்கில் பெருந்தகை கோபாலகிருஸ்ணன் அவர்கள் லண்டன் அரகாவலர் சபையின் தலைவர்; முன்வந்து தோழர் கணகசுந்தரம் வரதீஸ்வரன் அவர்கள் ஊடாக பெற்றுக்கொடுத்துள்ளார்;.
இதனை ஒரு விழாவாக எண்ணாது இதில் பொதிந்திருக்கின்ற விடயங்களை நோக்க வேண்டும் இன்று ஹட்டன் ப்ளான்டேசனுடன் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டம் தோட்டங்களில் எங்கெல்லாம் தரிசு நிலம் இருக்கிறதோ அங்கெல்லாம் பழச்சோலைகள் உருவாக்கப்படும் என அவர் இதன் போது தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதியும் தோட்ட முகாமையாளருமான சுஜீவ கொடகே கருத்து தெரிவிக்கையில் நாம் இன்று எமது மூதாதையர்கள் நாட்டிய மரங்களில் பயன் பெறுகிறோம.; பழங்கள் சாப்பிடுகிறோம். எமது அன்றாட தேவைகளுக்கு உபயோகிக்கின்றோம், ஆகவே நாம் இதனை எதிர்கால சந்ததியினருக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு மரங்கள் தான் எமது உயிர் நாடி எனவே இந்த மரங்களை பாதுகாத்து பயன் பெறுவது உங்கள் அனைவரினதும் கடமை என அவர் இதன் போது தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்