பண்டாரநாயக்காவின் கொள்கையே எனது கொள்கை! ; ஜனாதிபதி

0
131

சர்வதேசத்தை வெற்றி கொள்கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதும் தாம் அன்று பண்டாரநாய்க அவர்களின் அரசியல் தத்துவத்தில் இருந்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் அது தவிர உலகின் எந்தவொரு நாட்டுடனும் வேறு வெளிக்கடப்பாடுகள் தமக்குக் இல்லையென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று(24) முற்பகல் வரக்காபொல நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னிலைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி தர்மசிறி சேனாநாயக்க அவர்களின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

2015 ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டின் 62 இலட்சம் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து இந்நாட்டை பொறுப்பளித்ததாகவும் அப்பொறுப்பை நிறைவேற்றும்போது முன்நோக்கி பயணிப்பேனன்றி ஒருபோதும் பின்நோக்கி பயணிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எல்லோருடனும் இணைந்து நாட்டுக்கு பொருத்தமான ஒரு அரசியல் யாப்பை தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியல் யாப்ப்பு தயாரிக்கும் குழுவில் உள்ளவர்களே புதிய அரசியல் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துவருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஒரு யாப்பின் தேவையை முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்களின் தலைமையிலான சுதந்திரக் கட்சியாகும்.

அதன் பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டிலும் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டிலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் புதிய யாப்புக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் எனத் தமக்குத் தெரியாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தாம் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பாதுகாக்கும் வகையிலேயே நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டுக்குத் தேவையான மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனநாயகவாதியும் மறைந்த அரசியல்வாதியுமான தர்மசிறி சேனாநாயக்க போன்றவர்களின் முன்னுதாரணமான செயற்பாடு இன்றைய அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் அவரிடத்தில் சிறிதளவேனும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here