பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்

0
65

டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, இன்று (01) முதல் ஜனவரி 15ம் திகதி வரை சில்லறை வர்த்தக நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தப்படவுள்ளது.

பண்டிகைக் காலங்களில் நுகர்வோரால் அதிகளவில் கொள்வனவு செய்யப்படும் ஆடைகள், நீடித்து நிலைத்திருக்கும் பொருட்கள், மின் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகளை மேற்கொள்ளும்போது, ​​வர்த்தக நிலையங்களில் குறிப்பிட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான முறையான விலைப்பட்டியல் காட்சிப்படுத்தல்,பொருட்களை விற்பனை செய்யும் போது அதற்கான பற்றுச்சீட்டு வழங்குவதன் ஊடாக வழக்கமான வர்த்தகம் நடைபெறுவதை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இது தவிர, தொலைபேசி வர்த்தகம் மற்றும் சலுகை விற்பனை போன்றவற்றிலும் அதிகாரசபை கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், கடந்த சில நாட்களாக சோதனையிடப்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் தொடர்ந்தும் சுற்றிவளைக்கப்படுவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அந்த அதிகார சபை, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here