29 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் மோகம் ஏற்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக பாகிஸ்தானில் நாளை (20) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி தொடங்குவதே இதற்குக் காரணமாகும்.இவ்வாறு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடங்குகின்றது. இப்போட்டி நாளை முதல் மார்ச் 09 ஆம் திகதி வரை லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு விரும்பவில்லை.
இருப்பினும், 2019 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலமாக, நாட்டில் கிரிக்கெட் படிப்படியாக மீண்டது.
பாகிஸ்தானில் கிரிக்கெட்டை தொடர்ந்து பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக பாதுகாப்பு காணப்படுவதால், நாளை தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கு கடுமையான பாதுகாப்பை வழங்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட வேண்டிய காவல்துறையினரின் எண்ணிக்கை 13,000 க்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது.
வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் மைதானங்களிலும், அணிகள் செல்லும் வீதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
போட்டிகள் நடைபெறும் அனைத்து நகரங்களிலும் உயர் பாதுகாப்பு கேமரா அமைப்புடன் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக உயரமான கட்டிடங்களிலும் துப்பாக்கி சுடும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..