கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்து இரண்டு வயதுக் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.
பிரமந்தனாறு, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவதினத்தன்று தாயார் தனது குழந்தையுடன் அருகில் உள்ள அயலவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது, தனது கணவருக்கு உணவு வழங்குவதற்காகக் குழந்தையை தற்காலிகமாக அயலவர் வீட்டிலேயே விட்டுவிட்டுத் தாய் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைக் காணாததால் பதற்றமடைந்த அயலவர்கள், குழந்தை தாயிடம் சென்றுவிட்டதா எனப் பரிசோதித்துள்ளனர். எனினும், குழந்தை அங்கேயும் இல்லாததால் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அந்த வீட்டின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் குழந்தை விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உடனடியாகக் குழந்தை மீட்கப்பட்டு தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது உயிரிழந்த குழந்தையின் சடலம் மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




