பாப்பரசர் மறைவு: 9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

0
19

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, வத்திக்கானில் அவர் வாழ்ந்த இல்லம் பூட்டப்பட்டது. தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதி சடங்கு 4 முதல் 6 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும். வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் பாப்பரசர் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக பாப்பரசர் போற்றப்படுகிறார். 2013 மார்ச் 13 அன்று, 266 ஆவது பாப்பரசராக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த பெப்ரவரி 14 அன்று ரோம் நகரில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சுவாச பிரச்சினை, சுவாச பாதையில் தொற்று, நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில், உடல்நலம் தேறிய நிலையில், மார்ச் மாதம் மீண்டும் வத்திக்கான் இல்லத்துக்கு திரும்பினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். மறுநாளான நேற்று (21) காலை 7.35 மணி அளவில் வாடிகனின் உள்ள தனது இல்லத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்.

இதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்கு பாப்பரசரின் மறைவு செய்தியை கார்டினல் கெவின், முறைப்படி தெரிவித்தார். அவரது மறைவுக்காக உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் துக்க மணி ஒலிக்கப்பட்டது.

வழக்கமாக பாப்பரசர் ஒருவர் மறைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, வத்திக்கான் நிர்வாக பொறுப்பை கார்டினல்கள் குழு ஏற்கும். அதன்படி, தற்போது அக்குழுவினர் வாத்திக்கான் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளனர். பாப்பரசரின் இறுதிச் சடங்கு மற்றும் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here