ராஜாங்க கல்வி அமைச்சை பொறுப்பேற்றது நான் உழைப்பதற்கு அல்ல; அமைச்சர் ராதா காட்டம்- அதிகாரம் கிடைத்ததாக அறிவிப்பு!

0
121

கல்வி அமைச்சில் கடந்த கடந்த காலங்களில் நிலவிய அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மாத்தளை ஹாமினா தேசிய கல்லூரியில் (19.11.2017) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதே இவ்வாறு தெரிவித்தார்.
அதிபர் தலைமையில் இந் நிகழ்வில் விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மத்திய மாகாண சபை உறுப்பினர் இப்ராஹிம் உட்பட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோரகள் ஆகியோர் கலந்துக் கொண்டாரகள்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வேலுகுமார், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IMG_5845

தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்
கல்வி அமைச்சில் இராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என நான் கடந்த வாரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது கருத்து தெரிவித்திருந்தேன்.
இது தொடர்பாக பல மட்டத்திலும் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. எனது அதிகாரங்கள் எனக்கு முறையாக வழங்கப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறை படுத்துகின்ற பொழுது நான் பல சவால்களை கடந்த காலங்களில் சந்திக்க வேண்டியிருந்தது. இதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்ற சூழ்நிலையிலேயே நான் இதனை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.
கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் அங்கு நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒரு கடமை எனக்கு இருக்கின்றது.
அந்த வகையில் தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதிபர்களும் பெற்றோர்களும் எனது காரியாலயத்தை நோக்கியே வருகின்றார்கள். அப்போது அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

அதற்கு அதிகாரம் தேவை. கொடுத்த அந்த அதிகாரங்கள் எழுத்தளவில் மாத்திரம் இருப்பதால் எதனையும் செய்ய முடியாது. அது செயற்பாட்டில் இருக்க வேண்டும். இதற்கு பல வழிகளிலும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதை நான் உணர்ந்திருந்தேன்.

IMG_5850
எங்களுடைய அமைச்சர் மிகவும் திறமையாக கல்வி அமைச்சை முன்னெடுக்கின்றார் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எங்களையும் அதே அளவில் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் வழங்க வேண்டும். அதனை அதிகாரிகளுக்கும் அவர் அமைச்சர் என்ற முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக தமிழ் பாடசாலைகளுக்கான அதிகாரிகள் நியமனம் அதிபர்கள் நியமனம் ஆசிரியர்கள் நியமனம் பாடசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு விதமான ஆளனி நியமனங்கள் இடமாற்றங்கள் தொடர்பாக என்னுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அப்படி செய்கின்ற பொழுதே அந்த விடயங்களை தமிழ் பிரிவுக்கு மிகவும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல முடியும். அப்படி இல்லாவிட்டால் பல முரண்பாடுகள் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும். அந்த நிலைமையே கடந்த காலங்களில் இருந்தது. அதை கல்வி இராஜாஙக அமைச்சராக ஒரு தமிழராக இருந்துக் கொண்டு அதனை செய்யாவிட்டால் யார் அதனை செய்வது.

ஒரு சிலர் என்னிடம் கேள்வி கேட்கலாம் இவ்வளவு காலமாக என்ன செய்தீர்கள்நாடு முழுவதும் ஒடி திரிந்தது எல்லாம் என்ன என்று. நான் கடந்த காலங்களில் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்தேன். அவை அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் தற்போது தேவைகள் அதிகரித்து உள்ளது. அதற்கு தயாராகும் அதே வேலை அதற்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்ய வேண்டும். அதனையும் நிறைவேற்றவும் வேண்டும். அந்த மாற்றங்களை செய்ய அதிகாரங்கள் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லாமல் அதனை செய்ய முடியாது. அதன் பொழுதே இந்த சிக்கலான ஒரு நிலைமை ஏற்பட்டது. அதனையே நான் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.

IMG_5839

நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என கூறவில்லை. அப்படி வெளியேறினால் ஒன்றுமே நடக்காது. எங்களுடைய கையில் காயம்பட்டுவிட்டால் நாங்கள் கையை வெட்டிப்போடுவதில்லை. அதற்காக தகுந்த வைத்தியரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்வோம்;. அது போலவே இந்த நிகழ்வும். நான் எனக்கு நடக்கின்ற அநீதியை பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. அதனை ஊடகங்கள் மூலமாகவும் சம்மந்தபட்வர்கள் ஊடாகவும் வெளிக் கொண்டு வந்தேன். அதன் காரணமாக இன்று சுமுகமான ஒரு தற்பொது தீர்வு கிடைத்துள்ளது.
தனியே பாடசாலைகளுக்கு கட்டிடங்களை கட்டுவதும் மலசலகூடங்களை கட்டுவதும் விழாக்களுக்கு செல்வதும் கட்டடங்களை திறந்து வைப்பதும் மாத்திரம் எனது கடமையல்ல. தேசிய ரீதியாக தமிழ்மொழி கல்விக்கும் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் ஒரு தேசிய கொள்கையை வகுக்க வேண்டும். உதாரணமாக தற்பொழுது எமது வரலாறு பாடத்திட்டத்தில் தமிழர்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. அதனை மாற்றி அமைக்க வேண்டும். உண்மையான தகவல்களை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும். இப்படியான பல செயற்பாடுகள் கல்வி அமைச்சில் இருக்கின்றது. நான் இன்று இதனை முறையாக செய்து வைத்தால் மாத்திரமே தமிழ் கல்விக்கு தேசிய ரீதியில் அங்கீகாரமும் எதிர்காலத்தில் தமிழ் கல்விக்கு பொறுப்பாக வருகின்றவர்களுக்கும் இதனை எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி முன்னெடுத்து செல்ல முடியும். இந்த நாட்;டில் இன பிரச்சனைக்கு புதிய அரசில் அமைப்பின் ஊடாக தீர்வு ஒன்று கிடைப்பது போன்றதே இந்த பிரச்சனைக்கும் கிடைக்கின்ற தீர்வாகும். இதை நாங்கள் ஒரு ஆரம்ப கட்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பிரச்சினைகளை தெளிவாக வெளிக் கொண்டு வந்து அதற்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது எனது எண்ணமாகும். அதனையே நான் செய்தேன். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் யாரும் விமர்சிக்க வேண்டாம். விமர்சிப்பவர்கள் தமிழ்மொழி கல்வியை விமர்சிப்பவர்களாவும் கொச்சைபடுத்துபவர்களாவும் தழிழ் கல்விக்கு துரோகிகளாகவும் கருதுகின்றேன். இதை நான் செய்யவிட்டால் இராஜாங்க அமைச்சர் என்ன செய்கின்றார் என்று கேள்வி கேட்பார்கள் செய்தால் விமர்சிக்கின்றார்கள். இதில் என்ன நியாயம். நான் இராஜாங்க அமைச்சை பொறுபேற்றது நான் உழைப்பதற்கு அல்ல தழிழ் மக்களுக்கான தமிழ் கல்வியை அபிவிருத்தி செய்ய. அதை எனது காலத்தில் எந்த விதமான சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு நிறைவேற்றுவேன்.எனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்ட போது அனைத்து ஊடகங்களும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

அதே போல எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்; முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு அனைவரும் இணைந்து செயறபட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை இந்த செயற்பாடு உணர்த்தி நிற்கின்றது என்று அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

பா. திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here