றொரண்டோ (Toronto) நகரில் பிபா (FIFA) உலகக்கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஆரம்பமானது முதல், விதிகளை மீறி அனுமதியின்றி பறக்கவிடப்பட்ட 12-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை (Drones) தடுத்து நிறுத்தியுள்ளதாக றொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விளையாட்டு அரங்குகள் மற்றும் ரசிகர் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை கடுமையான முறையில் அமல்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 21 அன்று இரவு 8:15 மணியளவில், உலகக்கிண்ண வலயத்திற்கு மிக அருகில் உள்ள ஸ்ட்ராக்ஷன் அவென்யூ (Strachan Avenue) மற்றும் ஆர்ட்னன்ஸ் வீதி (Ordnance Street) சந்திப்புப் பகுதியில் பறந்த ட்ரோன் ஒன்றை பொலிஸார் கண்டறிந்து தடுத்து நிறுத்தினர்.
இதனை இயக்கிய நபர் மீது கனடிய விமான போக்குவரத்து விதிகளின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“விதிவிலக்குகள் கிடையாது. றொரண்டோ பிபா ரசிகர் விழா (FIFA Fan Festival Toronto) மற்றும் சென்டெனியல் பூங்கா (Centennial Park) ஆகிய பகுதிகள் ட்ரோன் பறக்க தடைசெய்யப்பட்ட வலயங்களாகும்.
இவற்றை கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன” என றொரண்டோ பொலிஸ் சேவை (TPS) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.




