விடுவிக்கப்படும் போராளிகளை சர்வதேச மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்!

0
101

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் சர்வதேச மருத்துவர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  அத்துடன் எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நீதியான செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேசம் முன்வரவேண்டும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணாமற்போனவர்களை வெளிப்படுத்தக் கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே காணாமற்போனவர்களின் உறவினர்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகிய முன்னாள் போராளிகளுள் இதுவரை 103 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர்.  அரசாங்கம் இதனை மூடி மறைக்கிறது.

எனவே முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு பின் விடுதலை செய்வதற்கு முதல் இலங்கை மருத்துவர்களால் அன்றி, சர்வதேச மருத்துவர்களால் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எந்த விதமான நோய்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த இறுதி யுத்தக் காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலப்பகுதியில் இராணுவத்தின் கட்டளைக்கு இணங்க 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போராளிகள் வட்டுவாகலில் வைத்து நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களுள் இதுவரை உயிரோடு ஒப்படைத்தவர்களின் முடிவும் வரவில்லை.  காணாமல் போனவர்களின் முடிவும் கிடைக்கவில்லை.

எனவே இதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே சரியான தீர்வாக அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here