எரிவாயு நிறுவனங்களை நடத்திச் செல்வதானால் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 400 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை எரிவாயு விலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு வர்த்தக அமைச்சில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று கூடியது.
அமைச்சர்களான கெஹேலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அமரவீர, டளஸ் அழஹபெரும, உதயகம்மன்பில மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதோடு இரண்டு எரிவாயு நிறுவனங்களின் பிரதானிகளும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என எரிவாயு நிறுவனங்களின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிப்பது குறித்த தீர்மானம் எதுவும் இதன்போது மேற்கொள்ளப்படவில்லை.