தனது பாராளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்இ மே மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல.
இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஒருபோதும் ஈடுபடவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை என தெரிவித்துள்ளார். 3 தசாப்தங்களுக்கு மேல் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக தான் குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலனைப் பாதுகாப்பதில் தங்கள் கட்டாயக் கடமைகளில் இருந்து தவறிவிட்டதாக அவர்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம்.
தன்னுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுள்ளது என குறிப்பிட்ட அவர் இது போன்ற ஒரு மிகத் தீவிரமான அறிக்கை அது நாட்டின் பிரதமரிடமிருந்தும், குறிப்பாக உங்களைப் போன்ற அந்தஸ்துள்ள ஒருவரிடமிருந்தும் வெளிப்படும்போது, பொது மக்கள் அதை சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை என்று கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள முடியும். இது தனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் எனது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.