ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பும் எதிரணி

0
180

ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பஸ்கள் வழங்க எவ்வாறு நிதி கிடைக்கின்றது, அந்த வழிமுறையை சொன்னால் சிறப்பாக இருக்குமென நான் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தால் சிலருக்கு தொடை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கைக்கூலிகள் மூலம் கட்டுக்கதைகள் பரப்பட்டு வருகின்றன. இப்படியானவர்களின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. மக்கள் அவற்றை நம்ப போவதுமில்லை. ஏனெனில் மக்கள் என்பக்கம் எனவும் ஜீவன் தொண்டமான் கூறினார்.

” அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் எல்லா வேலைத்திட்டங்களையும் எதிர்த்தால் தான் அது எதிர்க்கட்சி என நினைத்துக்கொண்டே பிரதான எதிர்க்கட்சி செயற்படுகின்றது. அதுமட்டுமல்ல அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை குழப்பும் நோக்கில் ‘ஊழல்’ முத்திரை குத்தப்பட்டு வருகின்றது. தேர்தல் காலம் வந்தால்போதும் – அலசி ஆராயாமல்கூட எடுத்த எடுப்பிலேயே ஊழல், ஊழல் என கோஷம் எழுப்புகின்றனர்.

ஆனால் தாங்கள் எதையாவது செய்துவிட்டால் அது சேவை என்ற போர்வையில் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்க்கட்சியால் பாடசாலைகளுக்கு பஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பஸ்லின் விலை 5 மில்லியன் ரூபா எனக் கூறப்படுகின்றது. இதுவரை 47 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படியானால் 235 மில்லியன் ரூபா எங்கிருந்து வந்தது? மரத்தில் இருந்து பறித்தார்களா? வந்த வழியைதான் கேட்டேன். ஏனெனில் அவர்கள் வெளிப்படை தன்மை பற்றி கதைப்பவர்கள். எனவேதான் பஸ் விடயத்திலும் வெளிப்படை தன்மையை வலியுறுத்தியுள்ளேன்.” – என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here