தமது தோட்டத்தில் உள்ள குடிநீர் திட்டத்தை முழுமைப்படுத்தி தடையின்றி சுத்தமான நீர் கிடைப்பதற்கு வழிசமைத்துக்கொடுக்குமாறு சுமார் 650 குடும்பங்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவ மெல்போர்ட் தோட்டத்தில் வாழும் மக்களே இவ்வாறு கூட்டாக வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
மெல்போர்ட் தோட்டத்தில் சுமார் 650 குடும்பங்கள்வரை வாழ்கின்றன. எனினும், அத்தியாவசிய தேவையான குடிநீரை பெறுவதில் அவர்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இதனைக்கருத்திற்கொண்டு ஈராண்டுகளுக்கு முன்னர் குடிநீர் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அரசியல் குழப்பநிலையால் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களால் அத்திட்டம் அப்படியே கைவிடப்பட்டு, தற்போது காடாக காட்சியளிக்கின்றது.
ஒரு நாளைக்கு ஒரு நேரத்துக்கு மாத்திரம் தோட்ட நிர்வாகத்தால் நீர் வழங்கப்பட்டாலும், வெயில் காலத்தில் குடிநீரை பெறுவதில் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். சிலநேரங்களில் மழை நீரை சேமித்து வைத்தே வாழ வேண்டிய நிலையும் உள்ளது.
எனவே, நீர்வழங்கல் தொடர்பான அமைச்சு பதவி தற்போது மலையக தமிழர் ஒருவரிடம் இருப்பதால், தமக்கு விடிவு பிறக்கும் என அத்தோட்ட மக்கள் நம்புகின்றனர். அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது பிரச்சினைகளை தீர்ப்பாரெனவும் அவர்கள் நம்புகின்றனர்.
உலக குடிநீர் தினம் எதிர்வரும் 22 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. எனவே, அத்தினத்திலாவது தமக்கு தீர்வை பெற்றுதர அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.