காணாமல் போன மாணவன் பிக்குவானார்

0
36

மதுரங்குளி பகுதியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 12 வயது மாணவன் கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கிருந்த நிலையில் புதன்கிழமை (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கும் நெதுசர பிரியனந்த எனும் மாணவன் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் , மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது பாட்டியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக , குறித்த மாணவன் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறியதாக , உறவினர்கள் மதுரங்குளி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாருக்கு , குறித்த மாணவன் புத்தளம் – மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கு சென்றுள்ளதாகவும், பின்னர் அவரின் விருப்பத்தின் படி கதிர்காமம், 20 ஏக்கர் – டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது .

இவ்வாறு பௌத்த விகாரையில் ஒப்படைக்கப்பட்ட, குறித்த மாணவனின் விருப்பத்திற்கிணங்க திங்கட்கிழமை (20) அன்று “மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ளார் என கௌதம சதகம் அரன விகாரையின் விகாராதிபதி கலன்பிந்துனுவெவ அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரை அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் எனினும், பௌத்த துறவியாகுவதே தனது விருப்பம் எனவும், தான் விகாரையை விட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை என மதுரங்குளி சுபோதி” எனும் பெயரில் பௌத்த பிக்குவாக துறவறம் பூண்டுள்ள அந்த மாணவன் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here