கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெறுவதாகவும் காணிகளை பெருந்தொகையில் விற்பதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் சரத் விக்ரமசிங்ஹ ஒரு ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஆயினும் தனது 65 வயதை கடந்தும் மத்திய மாகாணத்தில் தனக்கிருக்குக் செல்வாக்கை பயன்படுத்தி கொட்டகலை பிரதேச சபையின் செயலாளராக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றி வருவதோடு இவர் சபையின் தலைவர், சபையின் உறுப்பினர்கள்,சபை உத்தியோகத்தர்களுக்கு மட்டும் நல்வராக இருக்கின்றார்.இதற்கு தவை தக்க வைத்து கொள்வதற்கே இவ்வாறு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கொட்டகலை பிரதேச சபைக்கு வந்த பின்னர் பிரதேச சபையின் காணிகளை தலைவருடன் சேர்ந்து சட்டதிற்கு புறம்பாக பாரிய தொகைகளை பெற்று தனது சகாக்களுக்கு பெற்று கொடுத்து வருகின்றார்.குறிப்பாக டெவன் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடத்தில் பல ஏக்கர் காணியினை ஒருவருக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பாரிய தொகையை இலஞ்சமாக பெற்று பிரதேச சபையின் ஆட்சேபனை இல்லை எனவும் கடிதத்தை வழங்கியுள்ளார்.அத்தோடு ஆர்கில் பிரதேசத்தில் பொதுமக்களின் தேவைக்காக சபைக்கு வழங்கப்பட்ட காணியினை 33 வருட குத்தகைக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.அதற்கு அந்த பிரதேச மக்களின் எதிர்ப்புகள் இருந்த போதும் அதனை சட்டத்திற்கு புறம்பாக செய்து வருகின்றார்.
இவ்வாறு ஊழல்களை செய்வதற்கு சபை தலைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.அத்தோடு நாட்டின் பொருளாதார பிரச்சனையால் ஒப்பந்த அடிப்படையில் எவரையும் சேவையில் அமர்த்த வேண்டாமென அரசினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதும் அதை மீறி செயல்படுகின்ற இவருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாது இலாபத்தை இலக்காக கொண்டு செயல்படுகின்ற சரத் விக்ரமசிங்கவை நீக்கி உரிய அதிகாரியை நியமிக்குமாறு சபையில் இராதாகிருஸ்ணன் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.