நடிகைகள் சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருவது தற்போது திரையுலகில் புதிய டிரெண்டாக மாறியுள்ளது.
மன அழுத்தம்
திரையுலகில் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சமீப காலமாக பல முன்னணி கதாநாயகிகள் சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருவது கவனம் ஈர்த்துள்ளது. புகழையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று தந்த அதே சமூக வலைதளங்கள், தற்போது மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்கு காரணமாக மாறியுள்ளதாக நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்.
ஏஐ
ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்கள் தவறாக மாற்றி பரப்பப்படுவது, டிரோல்கள், அவதூறு கருத்துகள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் ஆகியவை நடிகைகளின் மனநிலையை கடுமையாக பாதிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மன அமைதி மற்றும் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் பலர் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளனர்.
ஐஸ்வர்யா லட்சுமி
இந்த பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் இணைந்தார். “100 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு வரமாட்டேன்” என்று அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மமிதா பைஜு
அதேபோல், தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜு, சமூக வலைதளங்கள் தனது திரைப்பயணத்திற்கு முக்கியமானவை என்பதை அறிந்திருந்தாலும், அதிலிருந்து விலகியே இருக்க முடிவு செய்துள்ளார். இனி தனது திரைப்படங்கள் மற்றும் தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தனது பிஆர் குழுவே ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
கயாடு லோஹர்
நடிகை கயாடு லோஹர், ‘பாரடைஸ்’ உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், மன அமைதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய கருவியாக இருந்தாலும், மனநலம் மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடிகைகள் சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருவது தற்போது திரையுலகில் புதிய டிரெண்டாக மாறியுள்ளது.




