கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், 2017-ல் உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்தார். ‘மென்டல் மதிலோ’ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்திய அவர், ரவி மோகனுடன் ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு புடிச்சவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், 2019-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ‘சங்க தமிழன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2023-ல் சினிமாவை விட்டு விலக முடிவு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் எடுத்த முக்கிய முடிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர், “2023-ஆம் ஆண்டோடு சினிமாவுக்கு குட்-பை சொல்ல நினைத்தேன். ஆனால் விதி என்னை எதிர்பாராத பாதையில் அழைத்துச் சென்றது” என்று தெரிவித்துள்ளார்.
நாக் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த நிவேதா
தொடர்ந்து பேசிய நிவேதா பெத்துராஜ், “சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் என்னை விதி கொண்டு வந்து சேர்த்தது. என்னை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்ததற்காக இயக்குநர் நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றி. நாக் அஸ்வின் மட்டும் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்காவிட்டால், இந்நேரம் நான் இமயமலைக்கு சென்றிருப்பேன்” என்று கூறியுள்ளார். நிவேதா பெத்துராஜின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.




