செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் அரசாங்கம் தலையிடவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுவருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது செம்மணி விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், சர்வதேச நிபுணத்துவத்தின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
” செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்துக்கே அறிவிக்கப்படும். நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான வசதிகள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விசேட குழுவொன்றினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மறுபுறம் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. திமன்றத்துக்கு அறிவிக்குமாறு அதற்கான தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு நாம் இடமளித்திருக்கின்றோம். அதற்கமைய அந்த விவகாரத்தில் நியாயமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நம்புகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.