நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் – முதல்வர் இரங்கல்!

0
45
dailythanthi

இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இன்று போய் நாளை வா’, ‘சின்ன வீடு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி நடித்த அவர், குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜாவின் பட்டறை

தனது குருநாதர் பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியை தொடங்கியவர் பாக்யராஜ். பின்னர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என பல அவதாரங்களை எடுத்து அனைத்திலும் வெற்றியும் கண்டவர்.

அவருடைய திரைப்பயணத்தில் அந்த 7 நாட்கள் முக்கியமான படம். அதேபோல், சுவரில்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, சின்ன வீடு, மவுன கீதங்கள், சுந்தரகாண்டம், டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு என்று எத்தனையோ படங்களை சொல்லலாம்.

முத்திரை பதித்த பாக்யராஜ்‌

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜா தான். கோலிவுட்டின் 2 பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தை இயக்கும் போதுதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் பாக்யராஜ்.

1977-ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தை அடுத்து, கிழக்கே போகும் இரயில் மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களிலும் பாக்யராஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதுதவிர சிறுசிறு வேடங்களிலும் பாக்யராஜ் நடித்தார். இதன் தொடர்ச்சியாக 1979-ம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதே ஆண்டில் பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

1977-ம் ஆண்டு உதவி இயக்குநராகி அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடிகர், இயக்குநர் என தனது சினிமா பயணத்தில் விரைவாக முன்னேறினார் பாக்யராஜ். தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆளுமையாக பல ஆண்டுகள் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் பாக்யராஜ்‌. தற்போதும் கூட ஓரிரு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

மறைந்தாலும் மறையாத பெயராக தமிழ் சினிமா வரலாற்றில் பாக்யராஜ் என்றும் நிலைத்திருப்பார்.

இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here