பீர் பாட்டிலால் மகனை குத்திய கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார் மனைவி. அவரே காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கொற்கை கிராமத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.
கொற்கை கிராமத்தில் மகாதேவன் -அமுதா தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். மகாதேவன் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தினமும் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.
குடிக்க பணம் தராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக மனைவி அமுதாவின் கையை உடைத்து இருக்கிறார் . இந்த நிலையில் மனைவி அமுதாவிடம் சண்டை போட்டு 500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற மகாதேவன் குடித்துவிட்டு இரண்டு பீர் பாட்டில் வாங்கி வந்திருக்கிறார்.
வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மூத்த மகன் ராஜராஜ சோழன் ஓடிவந்து, ஏன் அம்மாவிடம் சண்டை போட்டு அடிக்கிறாய் என்று தட்டி கேட்டு இருக்கிறார். உடனே ஆத்திரப்பட்ட மகாதேவன், பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்தி கிழித்து இருக்கிறார். இதை தடுத்த மனைவியை அரிவாளால் வெட்ட முயன்று இருக்கிறார். அப்போது அந்த அரிவாளை பிடுங்கி கணவனின் கழுத்தில் குத்தி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்திருக்கிறார். அதன் பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று நடத்த சம்பவத்தை சொல்லி கணவனை கொலை செய்து விட்டதாக சொல்லி சரணடைந்திருக்கிறார்.