நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற காலநிலையினைத் தொடர்ந்து மாலைவேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவளை, வட்டவளை, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் அட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளேயர், தலவாக்கலை, ரதெல்ல, நானுஓயா உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுகின்றன.
எனவே இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகனசாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுருத்தியுள்ளனர். இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் விடுமுறையினை கழிப்பதற்காக நுவரெலியா பிரதேசத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதனால் இவ்வீதிகளில் வாகனப்போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. எனவே வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகனசாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதிவிபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மலைவாஞ்ஞன்